|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருநெல்வெண்ணெய் (நெய்வெணை)
இறைவர் திருப்பெயர் : சொர்ணகடேஸ்வரர், வெண்ணெய்யப்பர்,
நெல்வெண்ணெய்நாதர்.
இறைவியார் திருப்பெயர் : பிருஹந்நாயகி, நீலமலர்க்கண்ணி.
தல மரம் : புன்னை (தற்போதில்லை)
தீர்த்தம் : பெண்ணையாறு.
வழிபட்டோர் : சனகாதியோர் நால்வரும்.
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - நல்வெணெய் விழுதுபெய்.
தல வரலாறு
கல்வெட்டில் இறைவனின் பெயர் பொற்குடம்கொடுத்தருளிய நாயனார் என்றுள்ளது. கல்வெட்டில் வரும் பெயரும், வழக்கில் சம்ஸ்கிருதத்தில் வழங்கும் பெயரும் ஒன்றாகவுள்ளன.
கல்வெட்டில் சொல்லப்பட்ட பொற்குடம் கொடுத்த வரலாறு ஏதும் கிடைக்கப்பெறவில்லை. (ஊரிலுள்ள ஒரு முதியவர்; இக்கோயில் கிணற்றிலிருந்து பொற்குடம் எடுத்ததாக, அவருடைய தாத்தா சென்னதாக ஒரு செய்தியை கூறியுள்ளார்.)
சிறப்புக்கள்
- சிறிய கோயில்; இராஜகோபுரம், கொடிமரமில்லை.
மூவர் முதலிகள் - சுந்தரர் நடுவிலும் இருபுறங்களிலும் அப்பரும் சம்பந்தரும் உள்ளனர்; சம்பந்தர் கையில் தாளமின்றி, கை கூப்பிய நிலையிலும், சுந்தரர், நடன சுந்தரராகவும் காட்சி தருகின்றனர்.
- வாயிலின் வெளிச் சுவரில் தலப்பதிகம் கல்வெட்டில் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளது.
- முதற்குலோத்துங்கன், விக்கிரம சோழன், கோப்பெருஞ்சிங்கன் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன.
கல்வெட்டுக்களில் இறைவன் பெயர் "பொற்குடங் கொடுத்தருளிய நாயனார்" என்றும்; இப்பதி "மிலாடு ஆகிய சனாதன வளநாட்டுக் குறுக்கை கூற்றத்துக்கு உட்டபட்ட ஊர்" என்றும் குறிக்கப்பட்டுள்ளது. மேலும் முதற்குலோத்துங்க சோழனின் 48-வது ஆண்டுக் காலத்திலிருந்த கீழையூர் இராசேந்திர சோழ சேதிராயர் என்பவர் இக்கோயில் நடராசமூர்த்தியைப் பிரதிஷ்டை செய்தார் என்ற குறிப்பும் உள்ளது. (ஆனால் இன்று கோயிலில் நடராச மூர்த்தமே இல்லை.)
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
உளுந்தூர்பேட்டை - திருக்கோயிலூர் (வழி) எலவானாசூர்கோட்டை நெடுஞ்சாலையில் வந்து "எறையூர்" அடைந்து அங்கிருந்து பிரியும் பாதையில் வந்து (வடகுரும்பூர் வழியாக) 4-கி. மீ. தொலைவில் உள்ள நெய்வெணையை அடையலாம். எறையூர் - நெய்வெணை நகரப் பேருந்து செல்கிறது.
|