|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருமுருகன்பூண்டி
இறைவர் திருப்பெயர் : முருகநாதேஸ்வரர், முருகநாதசுவாமி.
இறைவியார் திருப்பெயர் : ஆலிங்கபூஷணஸ்தனாம்பிகை (முயங்குபூண்முலையம்மை),
ஆவுடைநாயகி, மங்களாம்பிகை.
தல மரம் : வில்வம்.
தீர்த்தம் : பிரமதீர்த்தம், ஞானதீர்த்தம், சுப்பிரமணியதீர்த்தம்.
வழிபட்டோர் : முருகப்பெருமான், அகத்தியர், மார்க்கண்டேயர்,
துர்வாசர் ஆகியோர்.
தேவாரப் பாடல்கள் : சுந்தரர் - கொடுகு வெஞ்சிலை.
தல வரலாறு
துர்வாசர் கற்பக உலகிலிருந்து மாதவி மர (குருக்கத்தி மர)த்தை இங்கு கொண்டு வந்தார் என்பர்; ஆதலால் இதற்கு மாதவிவனம் என்றும் பெயர்.
சுந்தரர் இவ்வழியே செல்லும்போது, இறைவன் தன் பூதகணங்களை வேடர் வடிவில் ஏவிச் சுந்தரரின் செல்வங்களைப் பறித்துக் கொண்ட தலம்.
வழிமறித்து நிதிபறித்த இறைவன் இருக்குமிடத்தைக் கூப்பிட்டுச் சுந்தரருக்குக் காட்டிய (வேடுபறி நடந்த இடம்) 'கூப்பிடுவிநாயகர்' அவிநாசிக்கு போகும் வழியில் 1 கி.மீ. தொலைவில் பாறைமேல் உள்ளார்.
- இத்தலம் பிரமகத்தி தோஷம் நீங்கிய தலம்.
சிறப்புக்கள்
சுவாமியும் அம்பாளும் மேற்கு பார்த்த சந்நிதிகள்; மூலவர் அம்பாள் பீடத்தின் கோமுகம் வடக்கு நோக்கி உள்ளது.
பதினாறுகால் மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால் வலப்பால் வேடுவர் உருவமும் சுந்தரர் உருவங்கள் இரண்டும் (ஒன்று பறிகொடுத்து முகம் வாடிய நிலையிலும், மற்றொன்று மீண்டும் பெற்ற மகிழ்ச்சி நிலையிலும்) உள்ளன.
சித்தபிரமை, பைத்தியம், பில்லி, சூன்யம் இவை நீங்க வேண்டுவோர் இங்கு வந்து தங்கியிருந்து நீராடி வழிபடுவதை இன்றும் காணலாம்.
பிரமதாண்டவ நடராசர் சந்நிதிக்கு சற்று தொலைவில் மாலாதரன் எனும் வேட மன்னன் வழிபட்ட மாதவனேஸ்வரர் கோயில் உள்ளது; நல்ல கல் கட்டிடம்.
எங்கும் இல்லாத புதுமையாக கோயிலின் முன் மண்டபத்தின் மேல், பெரிய நந்தி, ஆலயத்தைப் பார்த்தவாறு சுதையால் அமைக்கப்பட்டுள்ளது.
- இத்தலத்திற்கு செட்டிப்பாளையம் வாசுதேவ முதலியார் பாடிய தலபுராணம் உள்ளது.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
அவிநாசியிலிருந்து 5-கி. மீ. தொலைவில் உள்ளது. பேருந்து வசதிகள் நிறைய உள்ளது.
|