|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருக்குறுக்கை (கொருக்கை)
இறைவர் திருப்பெயர் : வீரட்டேஸ்வரர்.1
இறைவியார் திருப்பெயர் : ஞானாம்பிகை
தல மரம் : கடுக்கா
தீர்த்தம் : சூல தீர்த்தம்
வழிபட்டோர் : இலக்குமி, திருமால், பிரமன், முருகன்,
ரதி ஆகியோர் வழிபட்டத் தலம்.
தேவாரப் பாடல்கள் : அப்பர் - 1. ஆதியிற் பிரம னார், 2. நெடியமால் பிரம னோடு
தல வரலாறு
மக்கள் வழக்கில் 'கொருக்கை' என்று வழங்குகிறது.
இங்குள்ள சூல தீர்த்தத்தின் பெருமையறியாது, 'தீர்க்கபாகு' என்னும் முனிவர், கங்கை நீரைப் பெறவேண்டித் தம் கைகளை நீட்டியபோது அக்கைகள் குறுகிவிட்டன. அதுகண்டு தம்பால் பிழை நேர்ந்தது என்றெண்ணித் தலையைப் பாறைமீது மோதமுற்பட, இறைவன் காட்சி தந்து, அவர் உடற்குறையைப் போக்கினார் என்பது வரலாற்றுச் செய்தி. இத்தலம் 'குறுங்கை முனிவர் ' என்று இவர் பெயரால் அழைக்கப்பட்டு, நாளடைவில் 'குறுக்கை' என்று ஆனதாகச் சொல்லப்படுகிறது.
சிறப்புக்கள்
- மன்மதனை எரித்தத் தலம்.
யோகீசபுரம், காமதகனபுரம், கம்பகரபுரம் என்பன இதன் வேறு பெயர்களாகும்.
ராஜகோபுரத்தில் உள்ள சிற்பங்களில் பன்றி, யானை, நரசிம்மம், மனிதன் ஆகிய நான்கு முகங்களையுடைய ஒரு மூர்த்தியின் சிற்பம் காணத்தக்கது.
- கொடிமரமில்லை.
காமனைத் தகனம் செய்த இடம் 'விபூதிக்குட்டை ' என்ற பெயரில் 1 கி.மீ. தொலைவில் உள்ளது; இக் குட்டையில் எங்கெடுத்தாலும் மண்ணானது விபூதியாவேயுள்ளது.
குறுக்கை விநாயகர் - தலவிநாயகர் சந்நிதி உள்ளது; இச்சந்நிதியில் விநாயகர் சதுர ஆவுடையாரில் அமர்ந்த கோலத்தில் உள்ளார்.
நடராச சபையில் சிவகாமி, மாணிக்கவாசகர் திருமேனிகள் உள்ளன. இச்சபை, 'சம்பு விநோத சபை', 'காமனங்கநாசனி சபை' எனப் பெயர் பெறும்.
மூலவர் சுயம்பு மூர்த்தி; சதுர ஆவுடையார் - உயர்ந்த பாணம். மன்மதன் எறிந்த பஞ்ச பாணங்களுள் (ஐந்து அம்புகளுள்) ஒன்றான பத்மம் (தாமரை) பதிந்துள்ள அடையாளம் சுவாமி பீடத்தின் முன்புறத்தில் நடுவில் உள்ளது.
மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பாடியுள்ள தலபுராணம் உள்ளது.
சோழ, விஜயநகர மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன.
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
மயிலாடுதுறையிலிருந்து 12 கி. மீ. தொலைவில் உள்ளது. மயிலாடுதுறை - மணல்மேடு பேருந்துச் சாலையில் நீடூர் தாண்டிச் செல்ல வேண்டும். மயிலாடுதுறை -
மணல்மேடு நகரப் பேருந்துகள் உள்ளன. வாகனங்களில் கோயில் வரை செல்லலாம்.
|