|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருக்கடவூர் (திருக்கடையூர்)
இறைவர் திருப்பெயர் : அமிர்தகடேஸ்வரர், அமிர்தலிங்கேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : அபிராமி
தல மரம் : வில்வம், ஜாதி (பிஞ்சிலம்)
தீர்த்தம் : அமிர்த தீர்த்தம், சிவகங்கை.
வழிபட்டோர் : திருமால், பிரமன், மார்க்கண்டேயர், எமன்,
ஏழு கன்னிகள், அகஸ்தியர்,
புலஸ்தியர், வாசுகி, துர்க்கை, ஆகியோர்.
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - சடையுடை யானும்நெய்.
2. அப்பர் - 1. பொள்ளத்த காய,
2. மருட்டுயர் தீரவன்,
3. மலைக்கொ ளானை.
3. சுந்தரர் - பொடியார் மேனியனே.
தல வரலாறு
திருமால் முதலிய தேவர்கள் தூயதோர் இடத்தில் உண்ண வேண்டுமென்று அமுதக் கடத்தை இங்குக் கொண்டுவந்து வைத்தமையால்,
'கடபுரி ' அல்லது 'கடவூர் ' என்றாயிற்று. எம வாதனையைக் கடப்பதற்கு உதவும் ஊர் என்பதாலும் இப்பெயர் பெற்றது.
- மார்க்கண்டேயருக்காக இறைவன் எமனை உதைத் தருளிய தலம்.
- பிரமனுக்கு உபதேசம் செய்த இடம்.
மார்க்கண்டேயர் கங்கை நீருடன் பிஞ்சிலப் புஷ்பங்களையும் கொண்டு வந்து அர்ச்சித்ததாக வரலாறு. இதனால் இத்தலத்திற்கு
'பிஞ்சிலராண்யம் ' என்றும் பெயர். (தற்போது தலமரம் இதுவே. ஆதியில் தலவிருட்சம் வில்வம் என்பர்.)
சிறப்புக்கள்
- அட்ட வீரட்டத் தலங்களுள் (இது எமனை உதைத்த தலம்) இதுவும் ஒன்று.
திருக்கடவூர் வீரட்டம், கடபுரி, வில்வாரண்யம், பிரமரந்திரத்தலம், பாபவிமோசன புண்ணிய வர்த்தம் என்பன இத்தலத்தின் வேறு
பெயர்கள்.
இப்பதியில் அவதரித்த குங்குலியகலய நாயனார், வறுமையுற்ற காலத்தும், தன் மனைவியாரின் தாலியை விற்றுக் குங்குலியத்
தொண்டைச் செய்து பேறு பெற்றார்.
காரி நாயனாரும் இப்பதியிலேயே அவதரித்தவர் - இவர் அரசனிடம் சென்று பொருள்பெற்றுப் பல திருப்பணிகள் செய்து,
தொண்டாற்றி முத்தியடைந்த பதி.
அப்பரும், சம்பந்தரும் ஒருசேர எழுந்தருளி, இறைவனைத் தொழுது, குங்குலிய கலய நாயனாரின் திருமடத்தில் தங்கியிருந்த
பெருமை பெற்றப் பதி.
உள்ளமுருகப் பாராயாணம் செய்யப்படும் அபிராமி அந்தாதி (அபிராமி பட்டர் வாழ்ந்து - அம்பிகையின் அருளால்) பாடப்பட்ட
அற்புதப் பதி.
- அன்னை அபிராமியின் அருள் தலம்; யம பயம் போக்கவல்ல பதி.
இங்குள்ள காலசம்ஹாரமூர்த்தி - காலனை சம்ஹரித்த மூர்த்தி - மிகப்பெரிய மூர்த்தி - கம்பீரமான தோற்றம் - திருமேனியில் எமன்
வீசிய பாசத்தின் தழும்பு உள்ளது.
மார்க்கண்டேயர் இறையருள் பெற வழிபட்ட 108 தலங்களுள் இது 108-வது தலமாகும். (107-வது திருக்கடவூர் மயானம்)
சுவாமிக்கு நாடொறும் அபிஷேகத்திற்குரிய நீர் திருக்கடவூர் மயானத் தலத்தின் தல தீர்த்தமான காசி தீர்த்தத்திலிருந்து வண்டியில்
கொண்டு வரப்படுகின்றன. மார்க்கண்டேயருக்காக, பங்குனி மாதம், அசுவினி நட்சத்திரத்தில் கங்கையானது, இத்தீர்த்தமாக வந்ததாக வரலாறு.
ஆதலின் இத்தீர்த்தம் 'அசுவினி தீர்த்தம்' எனவும் வழங்கப்படுகின்றன.
- மிருகண்டு முனிவரின் அவதாரத் தலம்; அருகிலுள்ள மணல்மேடு ஆகும்.
- பூமிதேவி அனுக்ரஹம் பெற்ற தலம்.
ம்ருத்யுஞ்சஹோமம், உக்ரக சாந்தி, பீமரதசாந்தி, சஷ்டியப்த பூர்த்தி(மணிவிழா), சதாபிஷேகம், ஆயுள்ஹோமம் முதலியவை
செய்வதற்குரிய சிறப்புடைய தலம் இதுவாகும். (இச்சாந்திகள் வேறு தலத்தில் செய்ய நேர்ந்தாலும் இம்மூர்த்தியை நினைத்துத்தான் செய்ய
வேண்டும்.)
ஏழுநிலைகளுடன் கம்பீரமாக நிற்கும் ராஜகோபுரதில் உள்ள அரிய சிற்பங்களுள் பாற்கடலைக் கடைந்தது, கஜசம்ஹாரமூர்த்தி,
சிவபாத இருதயரின் தோளில் சம்பந்தர், பந்தரின் சிவிகையை அப்பர் தாங்குவது முதலியன கண்டு மகிழத்தக்கன.
- இங்கு தர்மராஜா (எமன்), உற்சவத் திருமேனி - சந்நிதி உள்ளது.
பூமிதேவி பிரார்த்திக்க, மகாவிஷ்ணுவும் பிரம்மாவும் வேண்ட இறைவன், எமனை (தர்மராஜா) எழுப்பித் தந்தருளினாராதலின்,
அநுக்ரஹம் பெற்ற (எழுப்பப்பெற்ற) தர்மராஜா - எமனின் திருவுருவம் இம்மூர்த்திக்கு (மரகதலிங்கத்திற்கு) நேர் எதிரில் உள்ளதைக் காணலாம்.
கன்றிய காலனைக் காலாற்கடிந்த காலசம்ஹார மூர்த்திக்கு ஆண்டில் 11 விசேஷ காலங்களில் (சித்திரை விஷேச, பெருவிழாவில்
5, 6-ஆம் நாள்கள், பிராயசித்த அபிஷேகம், தக்ஷ¤ணாயனபுண்ணிய காலம், ஆனி உத்திரம், புரட்டாசியில் கன்யாசதுர்த்தி, துலாவிஷ§,
ஆருத்ரா, உத்தராயண புண்ணிய காலம், மாசி மகம் கும்பசதுர்த்தி) அபிஷேகம் நடைபெறுகின்றன.
கார்த்திகை சோமவார 1008 சங்காபிஷேகம் சிறப்பாகக் கண்டு தரிசிக்கத் தக்கது.
- இக்கோயிலில் சோழர், பாண்டியர், விஜய நகர மன்னர்களின் கல்வெட்டுக்கள் உள்ளன.
( 'சிலம்பில்' வரும் நடன மகள் 'மாதவி'யின் இல்லம் இத்திருக்கடவூரில் தேரோடும் வீதியில் உள்ளது. தற்போது இவ்வீடு பாழடைந்த
நிலையில் உள்ளது.)
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
மயிலாடுதுறை - தரங்கம்பாடி பேருந்துச் சாலையில் (இரயில் மார்க்கமும் இதுவே. திருக்கடையூர் நிலையத்திலிருந்து 1 கி. மீ. தொலைவில்)
இத்தலம் உள்ளது. அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.
|