|
Home > Temples of India > pADal peRRa sthalam
திருவாரூர் - ஆரூர்ப்பரவையுண்மண்டளி கோயில் தலவரலாறு
Sthala puranam of Tiruvarur Paravaiyunmandali Temple
இறைவர் திருப்பெயர் : தூவாய்நாதர்.
இறைவியார் திருப்பெயர் :
தல மரம் : பாதிரி
தீர்த்தம் : கமலாயம்(தேவதீர்த்தம்), சங்கு தீர்த்தம், கயா தீர்த்தம்,
வாணி தீர்த்தம்(சரஸ்வதி தீர்த்தம், செங்கழுநீர் ஓடை.
வழிபட்டோர் : இந்திரன், துர்வாச முனிவர்.
தேவாரப் பாடல்கள் : சுந்தரர் - தூவாயா தொண்டுசெய்வார்.
தல வரலாறு
சிறப்புகள்
இக்கோயிலுக்குப் பின்புறம் திருநீலகண்ட நாயனார் கோயிலும்; தெற்குச் சந்நிதியில் பரவை நாச்சியார் கோயிலும் உள்ளன.
வீதிவிடங்கர், தேவரகண்டப்பெருமான், தியாகப்பெருமான், ஆடரவக்கிண்கிணிக்காலழகர், செங்கழுநீரழகர், செவ்வந்தித்தோடகர், கம்பிக்காதழகர், தியாகவிநோதர், கருணாகரத் தொண்டைமான், அசைந்தாடும் அப்பர், அடிக்காயிரம் பொன் வழங்கியவர், கமலேசர், செம்பொன் தியாகர், தேவசிந்தாமணி, தியாகசிந்தாமணி முதலாக அறுபதுக்கு மேற்பட்ட பெயர்கள் (தியாகராஜாவுக்குச்) சொல்லப்பட்டுள்ளன.
இப்பெருமானுக்குரிய அங்கப் பொருள்களாவன:- 1. ஆடுதண்டு - மணித்தண்டு, 2. கொடி - தியாகக்கொடி, 3. ஆசனம் - இரத்தின சிம்மாசனம், 4. மாலை - செங்கழுநீர்மாலை, 5. வாள் - வீரகண்டயம், 6. நடனம் - அஜபா நடனம், 7. யானை - ஐராவதம், 8. மலை - அரதன சிருங்கம், 9. முரசு - பஞ்சமுக வாத்தியம், 10. நாதஸ்வரம் - பாரி, 11. மத்தளம் - சுத்தமத்தளம், 12. குதிரை - வேதம், 13. நாடு - சோழநாடு, 14. ஊர் - திருவாரூர், 15. ஆறு - காவிரி, 16. பண் - பதினெண்வகைப்பண் என்பனவாகும்.
சாயரட்சை பூசையின்போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூசிப்பதாக ஐதிகமாதலால் அர்ச்சகர் நீண்ட அங்கி, தலைப்பாகை அணிந்துதான் எதிரில் நின்று பூசை செய்கின்றார்.
சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று. (மற்றவை - 1. நாகைக்காரோணம், 2. திருநள்ளாறு, 3. திருமறைக்காடு, 4. திருக்காறாயில், 5. திருவாய்மூர், 6. திருக்கோளிலி என்பன.)
"குவித்தகரம் விரித்தல் செலாக் கோயில்களும் பல உளவால்" எனும் மகாவித்வான், மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் வாக்குக்கேற்ப, திருவாரூர் கோயிலுள் சென்றுவிட்டால் ஏராளமான சந்நிதிகள் இருப்பதால், குவித்த கரங்களை - விரிப்பதற்கு வழியேயில்லையெனலாம்.
கமலாயம் - இது ஐந்து வேலிப் பரப்புடையது; (வேலி என்பது நில அளவைமுறை) இதை தேவதீர்த்தம் என்பர்.
(கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்துவேலி, ஓடை ஐந்துவேலி என்பது இங்கு வழங்கும் பழமொழி) கமலாயம் 64 கட்டங்களையுடையது.
- கீழ்க்கோபுரம் 118 அடி உயரமுள்ளது; மொத்தம் வீதிப் பிரகாரங்களையும் சேர்த்து ஐந்து பிரகாரங்கள்.
மழைவேண்டின் இப்பெருமானுக்கு நீர்கட்டுவதும், பசுக்கள் பால் கறக்க உதைத்தால், நன்கு கறக்கஇவர்க்கு அறுகுசாத்தி அதைப் பசுக்களுக்குத் தருதலும் இன்றும் மக்களிடையேயுள்ள நம்பிக்கையாகும்.
அம்பாள் கோயிலின் மேற்கு மூலையில் அக்ஷர பீடமுள்ளது; இதில் பீடமும் ஐம்பத்தோரு எழுத்துக்கள் எழுதப்பெற்ற திருவாசியுமே உள்ளது; நின்று தியானித்துச் செல்ல வேண்டும்.
பிரகாரத்திலிருந்து வெளிவந்தால் எதிரில் பார்ப்பதீச்சரம். இங்குள்ள தீர்த்தக் கிணறு 'முத்திக்கிணறு' எனப்படும்; இதை மக்கள் உருமாற்றி 'மூக்குத்திக் கிணறு' என்றழைக்கின்றனர்.
ஒட்டுத்தியாகர் கோயில் - சுந்தரரைக் கோயிலுள் போகாதவாறு விறன் மிண்டர் தடுக்க, இறைவன் இங்கு வந்து சுந்தரரை ஆட்கொண்டார் என்பர்.
"தேவாசிரியம்" எனப்படும் ஆயிரக்கால் மண்டபம் உள்ளது; இது ராஜதானி மண்டபம் என்றும் வழங்கப்படுகிறது.
அம்மையின் கோயில் - தேவ நீலோத்பலாம்பாள் (அல்லியங்கோதை) நான்கு திருக்கரங்கள் - இவற்றுள் இடக்கரம்; தோழி இடுப்பில் தூக்கிவைத்துக் கொண்டிருக்கும் முருகனின் தலையைத் தொட்டுக் கொண்டிருக்கிறது; இவ்வமைப்பு மிகவும் அற்புதமானது.
எண்ணெய்க் காப்பு மண்டபத்தின் அருகில் இந்திரலிங்கத்தை வணங்கி, அங்குள்ள சதுரக்கல்லின் மேல் நின்று ஏழுகோபுரங்களையும் ஒருசேர ஆனந்தமாகத் தரிசித்துப் பின்பு ஆரூர் அரநெறியை அடைய வேண்டும்.
- இக்கோயிலில் 65 கல்வெட்டுக்கள் உள்ளன. இவை பெரும்பாலும் சோழர் காலத்தியவை.
 |
 |
அமைவிடம்
மாநிலம் : தமிழ் நாடு
மயிலாடுதுறை, சிதம்பரம், தஞ்சாவூர், திருச்சி, காரைக்கால் முதலிய ஊர்களிலிருந்து பேருந்துகள் நிரம்பவுள்ளன.
|