logo

|

Home >

hindu-hub >

temples

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடைநாயகி திருக்கோயில் தல வரலாறு (சென்னை)

இறைவர் திருப்பெயர்: ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார், படம்பக்கநாதர், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர், ஆனந்தத்தியாகர்.

இறைவியார் திருப்பெயர்: திரிபுரசுந்தரி, வடிவுடையம்மை, வடிவுடை மாணிக்கம்.

தல மரம்:

தீர்த்தம் : பிரம தீர்த்தம், நந்தி தீர்த்தம்.

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார் , பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், ஐயடிகள் காடவர்கோன், முசுகுந்தன், பிரமன், திருமால், நந்திதேவர், சந்திரன், வால்மீகி முனிவர், 27 நட்சத்திரங்கள் முதலியோர்.

Sthala Puranam

thiruvoRRiyUr temple

  • முன்னொரு காலத்தில் பூமியில் பிரளயம் எற்பட்டது. பிரளயத்திற்குப் பின் புதிய உலகம் படைக்க பிரம்மா வழிபட்ட போது சிவபெருமான் தன் சக்தியால் வெப்பம் உண்டாக்கி அவ்வெப்பத்தால் பிரளய நீரை ஒற்றி எடுத்தார். அந்த வெப்பக் கோள வடிவத்திலிருந்து ஒரு மகிழ மரத்தடியில் சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியது. பிரளயத்திற்குப் பின் தோன்றிய முதல் சுயம்பு சிவலிங்கம் ஆனதால் இத்தல இறைவன் ஆதிபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
  • உபமன்யு முனிவரிடத்து சிவதீட்சை பெற்றுத் தம்மை வழிபட்ட வாசுகியைத் தம் திருமேனியில், இறைவன் ஐக்கியம் செய்து கொண்டமையால், "படம்பக்கநாதர் " என்ற திருநாமத்தையும் பெற்றார். அப்பாம்பின் வடிவத்தை (சுவடு) இறைவன் திருமேனியில் இன்றும் காணலாம்.
  • ஒரு காலத்தில் திருத்தலங்கள் உட்பட எல்லா ஊர்களுக்கும் இறை (வரி) விதித்து, அரசன் சுற்றோலை அனுப்பியபொழுது, அரசனுக்கும் ஓலைநாயகத்திற்கும் தெரியாதபடி, இறைவனருளால் ஓலையில் வரி பிளந்து, "இவ்வாணை ஒற்றியூர் நீங்கலாக கொள்க" என்று அவ்வோலையில் எழுதப்பட்டிருந்ததை வியந்து, அவ்வூருக்கு ஒற்றியூர் (விலக்கு அளிக்கப்பட்ட ஊர்) என்றும், இறைவனுக்கு "எழுத்தறியும் பெருமான்" என்றும் பெயர் ஆயிற்று. இச்செய்தி பெரிய புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
  • 27 நட்சத்திரங்கள் இங்கு சிவபெருமானை வழிபட்ட 27 நட்சத்திர லிங்கங்கள் உள்ளன.
  • நந்தி தேவருக்காக சிவபெருமான் பத்ம தாண்டவம் ஆடிய தலம்.
  • திருவொற்றியூரில் வசித்த ஏலேல சிங்கர் என்பவர் மன்னனுக்குக் கொடுப்பதற்காக மாணிக்க நகைகள் வைத்திருந்தார்.  அச்சமயம் காசியில் இருந்து வந்த சிவ பக்தர்கள் இருவருக்கு அந்த மாணிக்கத்தை கொடுத்துவிட்டார். மன்னன் ஏலேல சிங்கரிடம் மாணிக்கம் கேட்டபோது அவர் செய்வதறியாது திகைத்தார். அப்போது சிவபெருமானே அவருக்கு மாணிக்கம் தந்து அருள் செய்தார். எனவே இவர் மாணிக்கத் தியாகர் என்று அழைக்கப்படுகிறார்.
  • சுந்தரர், சங்கிலியாரை திருமணம் செய்து கொண்டு, இத்தலமரமான மகிழ மரத்தின் முன்னால், "நான் உன்னைப் பிரியேன்" என்று சங்கிலியாரிடம் சத்தியம் செய்து, இத்தல எல்லையைத் தாண்டியதும், தன் கண்பார்வையை இழந்தார்.
  • 'வட்டப்பாறை அம்மன் ' (காளி) சந்நிதி - இந்த அம்மன் ஒரு காலத்தில் மிக்க உக்கிரத்துடன் விளங்கி, பலிகளைக் கொண்டதாகவும், ஸ்ரீ ஆதிசங்கரர் இங்கு வந்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்துச் சாந்தப்படுத்தியதாகவும் வரலாறு சொல்லப்படுகிறது.
  • பட்டினத்துப் பெருமானுக்குப் பேய்க் கரும்பு இனித்த இடம் இஃது ஆகும்; ஆதலின் தனக்குரிய இடம் இதுவே என்று முடிவு செய்து கடற்கரையொட்டிய (அவர் கோயில் உள்ள) இவ்விடத்தில் சமாதியானார் என்பது வரலாறு.
  • பட்டினத்தார், காளமேகம், அருணகிரிநாதர், தியாகய்யர், முத்துசுவாமி தீட்சிதர் ஆகியோர் சுவாமி, 
    அம்பாள்மீது பாடல்களை- கீர்த்தனைகளைப் பாடியுள்ளனர்.

 

திருமுறைப் பாடல்கள் : பதிகங்கள்  :  சம்பந்தர்   -   1. விடையவன் விண்ணுமண்ணுந் (3.57);                                                அப்பர்     -   1. வெள்ளத்தைச் சடையில் (4.45),                                 2. ஓம்பினேன் கூட்டை வாளா (4.46),                                 3. செற்றுக் களிற்றுரி கொள்கின்ற (4.86),                                 4. ஒற்றி யூரும் ஒளிமதி (5.24),                                 5. வண்டோங்கு செங்கமலங் (6.45);                 சுந்தரர்    -    1. அழுக்கு மெய்கொடுன் (7.54),                                 2. பாட்டும் பாடிப் பரவித் (7.91); பட்டினத்துப் பிள்ளையார்  -    1. இருநில மடந்தை (11.31) திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது;                               பாடல்கள்  :  சம்பந்தர்   -       உளங்கொள்வார் (1.76.4);               அப்பர்     -       பற்றற் றார்சேர் (4.15.1),                                   ஓம்பினேன் கூட்டை (4.46.1 & 2),                                   திரையார் புனற்கெடில (6.7.4),                                   காடலாற் கருதாதார் (6.10.2),                                     சிறையார் வரிவண்டு (6.22.3),                                   கானேறு களிற்றுரிவைப் (6.30.4),                                   வானவர்க்கு (6.41.8),                                   அண்ணா மலையமர்ந்தார் (6.51.3),                                   உரையாரும் (6.62.6),                                   பிறையூருஞ் (6.71.4),                                   காரார் கடல்நஞ்சை (6.78.9),                                   வானகத்தில் வளர்முகிலை (6.80.8),                                     உழையாடு (6.81.7),                                   கார்முகிலாய்ப் (6.91.6),                                   பாரிடங்கள் (6.96.6);             சுந்தரர்   -          வாரமாகித் திருவடிக்குப் (7.5.9),                                   சுற்றுமூர் (7.31.2),                                   ஒற்றியூ ரென்ற (7.32.8),                                   வேதம் ஓதி (7.49.7),                                   விண்பணிந் தேத்தும் (7.69.3),                                   வாரிடங்கொள் (7.89.8); ஐயடிகள் காடவர்கோன் நாயனார் - தஞ்சாக மூவுலகும் (11.6.22) க்ஷேத்திரத் திருவெண்பா;           கபிலதேவ நாயனார்               - அடியோமைத் (11.22.15) சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை; பரணதேவ நாயனார்              -  மகிழ்ந்தன்பர் (11.24.65 & 99) சிவபெருமான் திருவந்தாதி; பட்டினத்துப் பிள்ளையார்          -  சென்றேறி (11.30.63) திருஏகம்பமுடையார் திருவந்தாதி;     நம்பியாண்டார் நம்பி              -  கம்பக் கரிக்கும் (11.34.55 & 70) திருத்தொண்டர் திருவந்தாதி; சேக்கிழார்                         -  வரை வளர் (12.21.332,333,334 & 338) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,                                           தென் திசையில் (12.28.1028,1030,1069,1070,1072 & 1073) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,                                        அங்கு சிலநாள் (12.29.199,201,204,213,217,218,219,231,243,264,266,269,274 & 345) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்,                                        பேருலகில் ஓங்கு (12.45.1 & 7) கலிய நாயனார் புராணம். 

 

Specialities

  • ஆதிபுரி என்றழைக்கப்படும் தலம்.
  • சுந்தரர், சங்கிலியாரை மணந்துகொண்ட சிறப்புடையத் தலம்.
  • கலிய நாயனாரின் அவதார, முத்தித் தலம். குருபூசை நாள் : ஆடி - கேட்டை.
  • முற்றத்துறந்த பட்டினத்து அடிகள் முத்தி பெற்றத் தலம்; வடலூர் வள்ளற்பெருமானின் வாழ்வொடு இயைந்த பதி.
  • கம்ப இராமாயணம் எழுதியது திருவொற்றியூர் தலத்தில் தான். 
  • இராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. 
  • தட்சிணாமூர்த்தி சந்நிதிக்கு பக்கத்தில் ஆதிசங்கரர் உருவமும்; அடுத்துள்ள வேப்பமர நிழலில் பெரிய லிங்கம் ஆவுடையாரின்றி உள்ளது.
  • 'ஒற்றியூர் ஈஸ்வரர் ' கோயில் முன் மண்டபத் தூண்கள் அற்புதமான சிற்பங்களையுடையது; மேலே உள்ள தூணில் - விதானத்தில் சூரியன் தலைப்புறமும், சந்திரன் காற்புறமும் அமைய மனிதனுடைய உடல் அமைக்கப்பட்டு, அவ்வுடலில் பஞ்சாட்சர விளக்கம் அமைத்துக்காட்டப்பட்டுள்ள (கற்சிற்பம்) அழகு கண்டுணரத் தக்கது.
  • நடராசப் பெருமானின் பின்புறத்தில் சுவரில் வெளிப் பிராகாரத்தில் ஏகபாத மூர்த்தி உருவம் 
    அழகாக உள்ளது. 
  • சுந்தரர், சங்கிலியாருடன் திருக்கல்யாண கோலத்தில் காட்சிதரும் சுந்தரமூர்த்தியார் மண்டபத்தில் மக்கள் இன்றும் திருமணங்கள் நடத்திச் செல்கின்றனர்.
  • கருவறை கஜப்பிரஷ்ட அமைப்புடையது.
  • மூலவர் சுயம்பு; நாக வடிவில் அமைந்துள்ள சிவலிங்கத் திருமேனி. சிவலிங்கமும், ஆவுடையாரும் சதுர வடிவில் அமைந்துள்ளன. சதுர வடிவமான கவசம் சுவாமிக்குச் சார்த்தப்பட்டள்ளது; ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளில் மட்டும் இக்கவசம் அகற்றப்பட்டு புனுகுசட்டம், சவ்வாது, சாம்பிராணித் தைலம் ஆகியவை மட்டுமே சார்த்தப்படுகிறது. இந்நாள் முதலாக மூன்று நாள்களுக்கு மட்டுமே சுவாமி, கவசமில்லாதிருப்பார்; மீண்டும் சார்த்தப்பட்டு ஆண்டு முழுவதும் சுவாமி கவசத்துடனேயே காட்சியளிக்கின்றார். அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே நடைபெறுகிறது.
  • திருவொற்றியூர் வடிவுடைநாயகி, மேலூர் திருவுடைநாயகி, திருமுல்லைவாயில் கொடியிடைநாயகி ஆகிய மூன்று திருக்கோயிலில் தொடர்போடு பௌர்ணமி அன்று மக்கள் வழிபடுகிறார்கள்.
  • இக்கோயிலில் பாசுபத லகுலீஸ்வரர் தனி சன்னதியில் இருக்கிறார்.
  • திருப்தீஸ்வரர் சன்னதி இருக்கிறது
  • புகழ்பெற்ற 'வட்டப்பாறை அம்மன்' (காளி) சந்நிதி உள்ளது. 
  • வள்ளற்பெருமானின் பாடல்களும், திருமுறைப் பதிகங்களும் கோயிற்சுவரில் கல்லில் பொறித்துப் பதிக்கப் பெற்றுள்ளன.
  • இக்கோயிலிலிருந்து சிறிது தொலைவில் (எண்ணூர் நெடுஞ்சாலையில்) பட்டினத்தார் திருக்கோயில் உள்ளது. பட்டினத்தார் இங்குதான் சமாதி அடைந்துள்ளார்.
  • மாசியில் பெருவிழா நடைபெறுகிறது.  மகிழடி சேவை என பிரசித்தி.
  • வைகாசியில் தியாகராஜ சுவாமி வசந்த உற்சவம் 15 நாட்கள் நடைபெறுகிறது.
  • இங்கு ஆடித்திங்கள் உத்திராட நட்சத்திரத்தில் (பட்டினத்தார்) குருபூஜை நடைபெறுகின்றது.
  • இக்கோயிலின் வெளிப்பிராகாரத்துத் திருமதிலைக் கட்டியவர் ஆதிமங்கலத்து ஆட்கொண்ட நாயகனான சேதிராய தேவராவர். இது கட்டிமுடிந்தது மூன்றாம் குலோத்துங்க சோழதேவர் காலத்தில் ஆகும்.
  • சோழ மன்னர்களுள் மதுரைகொண்ட கோப்பரகேசரி வர்மன், உத்தமசோழதேவன், முதலாம் இராஜராஜ சோழன், முதலாம் இராஜேந்திரசோழன், முதலாம் இராஜாதிராஜ சோழன், முதற் குலோத்துங்கசோழன், முதலானோர் காலங்களிலும், கங்க பல்லவமன்னர்களில் விஜய அபராஜித போத்தரையர், கோவிஜய நிருபதுங்கவர்மர், கோவிஜயகம்பவர்மர், முதலானோர் காலங்களிலும் பாண்டியர்களில் ஜடாவர்மனாகிய திரிபுவனச் சக்கரவர்த்தி சுந்தரபாண்டிய தேவன் காலத்தும், இராஷ்டிரகூட மன்னர்களில் காஞ்சி, தஞ்சை இவைகளைக்கொண்ட கன்னர தேவர் காலத்தும், விசயநகர வேந்தர்களில், சாயண்ண உடையார், தேவராய மகாராஜா குமாரர் புக்கண்ண உடையார், வீரப்பிரதாப தேவராய மகாராயர் முதலானோர் காலங்களிலும், சம்புவராய மன்னர்களில் சகல புவன சக்கரவர்த்தி ராஜ நாராயண சம்புவராயர் காலத்திலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.
  • இக்கோயில் கல்வெட்டுக்களில் இறைவர் மகாதேவபட்டாரர், திருவொற்றியூர் மகாதேவர், ஒற்றியூர் ஆழ்வார், திருவொற்றியூருடைய நாயனார், படம்பக்க நாயகதேவர் என்னும் பெயர்களால் கூறப்பெற்றுள்ளனர். இவற்றுள் படம்பக்க நாயக தேவர் என்னும் பெயர், திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீராஜாதி ராஜ தேவரின் ஒன்பதாம் ஆண்டுக் கல்வெட்டிலும், மகாதேவபட்டாரர் என்னும் பெயர் தெள்ளாறெறிந்த நந்திபோத்தரையர் கல்வெட்டிலும் காணப்படுகின்றன.
  • இத்திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவும், ஆனித் திருவிழாவும், மாசி மகவிழாவும் மிகச்சிறப்பாக நடைபெற்று வந்தன. பங்குனி உத்திரத் திருவிழாவின் ஆறாம் நாளில் படம்பக்க நாயக தேவரைத் திருமகிழ மரத்தின் கீழ்த் திருவோலக்கஞ் செய்தருளுவித்து ஆளுடைய நம்பியின் ஸ்ரீபுராணத்தைக் கேட்டருளச்செய்வது வழக்கம். ஆனித்திருவிழாவின் ஆறாம் நாளில் மூன்றாங் குலோத்துங்க சோழன் இக்கோயிலிலுள்ள இராஜராஜன் திருமண்டபத்தில் திருவோலக்கஞ் செய்தருளி விநோதம் கொண்டருளினான் என்று அம்மன்னனது 19 -ஆம் ஆண்டுக் கல்வெட்டில் குறிப்பிடப் பெற்றுள்ளது. மாசி மகவிழாவின் பொருட்டு சிறுவப்பேடாகிய மும்முடிச் சோழ நல்லூர்ப் புறவுவரித்திணைக் களத்துக் கணக்காளன் நிவந்தம் அளித்திருந்தான். இந்நிவந்தம் அளிக்கப்பெற்ற காலம் மூன்றாங் குலோத்துங்க சோழ தேவரின் முப்பத்தொன்றாவது ஆண்டாகும்.
  • இக்கோயிலில் இராஜராஜ மண்டபம் என்னும் பெயருடைய மண்டபம் ஒன்று இருந்தது. அம்மண்டபத்தில் இருந்து கோயில் கருமங்களை ஆராய்ந்து வந்தனர்.
  • குலோத்துங்கசோழன் மண்டபம் கோயிலுக்குள் இருந்த ஒரு மண்டபமாகும். இதில் நாடோறும் ஐம்பது அடியார்களுக்கு அன்னமளிக்கப்பெற்று வந்தது. இதன் பொருட்டுப் பையூர்க் கோட்டத்து அரசூருக்கு அருகில் உள்ள ஊராகிய பவனம்பாக்கத்திற்கு எழுத்தறிவார் நல்லூர் என்னும் பெயரை இட்டு அதில் ஒரு பகுதியை அன்னம் அளிப்பதற்கு நிவந்தமாக முதற்குலோத்துங்க சோழன் அளித்திருந்தான். இந்த ஏற்பாட்டை முதற்குலோத்துங்க சோழன் தன் தலைநகராகிய கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து செய்தருளினான்.
  • வியாகரணதான வியாக்கியான மண்டபம்: இது சித்தரசன் பொருட்டு துர்க்கையாண்டி நாயக்கனால் கட்டப் பெற்றதாகும். இம்மண்டபத்திற்கும் மற்றுமுள்ள திருப்பணிகளுக்கும் உடலாக ஒற்றியூர் வடகரை, தென்கரையில் பொன்வரி வகுப்பால் உள்ள மாடையைப் புழல்கோட்டத்து நாட்டவர் அளித்துள்ளனர்.
  • மண்ணைக்கொண்ட சோழன் மண்டபம்: வளவன் மூவேந்தவேளார், விக்கிரமசிங்க மூவேந்த வேளார் என்னும் இரண்டு அதிகாரிகள் இம்மண்டபத்திலிருந்து கோயில் சம்பந்தமான ஒரு வழக்கை விசாரித்ததாக முதலாம் இராஜாதிராஜதேவரின் 26-ஆம் ஆண்டுக் கல்வெட்டு அறிவிக்கின்றது.
  • இவ்வூரில் சதுரானன பண்டிதற்குத் திருமடம் ஒன்று இருந்தது. அதற்குத் திருமயானமடம் என்று பெயர் வைக்கப்பெற்றிருந்தது. இச்செய்தி முதலாம் இராஜேந்திர சோழதேவரின் 31-ஆம் ஆண்டுக் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளது.
  • இராஜேந்திரசோழன் மடம்: ஆரிய தேசத்து மேகலாபுரத்து பிராமணி நாகலவ்வைச் சாநியான ஆரிய அம்மையாரால் கட்டப்பெற்றது. இம்மடத்திற்கு மடப்புறமாக இவ்வம்மையார் நிலம் வாங்கி விட்டிருந்தனர்.
  • முதற் குலோத்துங்கசோழன் மடம், விசயநகர பரம்பரையைச் சேர்ந்த ஹரிஹரர் காலத்து அங்கராயன் மடம் போன்றவை கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றன.
  • கோயிலுக்கு நெய்கொண்டு வந்து அளந்தவர்கள் அருமொழித்தேவன் நாழியால் அளந்து வந்தனர்.
  • படம்பக்க நாயகர் என்னும் இறைவரது திருப்பெயரை, கோயில் நாயகம் செய்துவந்த ஒருவனுக்கு படம்பக்க நாயக பட்டன் எனவும், திரிபுவன சுந்தரத்தெரு மன்றாடிகளில் ஒருவனுக்குப் படம்பக்கன் எனவும் இட்டு அழைக்கப்பெற்றிருந்தனர். எழுத்தறிவார் என்னும் திருப்பெயரை, பையூர்க் கோட்டத்தில் உள்ள அரசூர்க்கு அருகில் இருக்கும் பவனம் பாக்கத்திற்கு எழுத்தறிவார் நல்லூர் என்று வைக்கப்பெற்றிருந்தது. விசயநகர வேந்தனாகிய வீரப்பிரதாப தேவராயர் காலத்தில் அதாவது சகம் 1346 - இல் புழல்நாட்டு மணலி என்னும் ஊரினர் ஒற்றியூருடைய நாயனார்க்கு உப்புத்தட்டு ஒன்றைக் கொடுத்திருந்தனர். அதற்குப் படம்பக்க நாயகப் பேரளம் என்னும் பெயர் வைக்கப்பெற்றிருந்தது.
  • இவ்வூர், கங்கைகொண்ட சோழன் காலம் முதல் முதற்குலோத்துங்க சோழன் காலம் வரையில் சயங்கொண்ட சோழ மண்டலத்துப் புழற்கோட்டத்துப் புழல் நாட்டில் உள்ள ஊர்களில் ஒன்றாய் இருந்தது. முதற்குலோத்துங்கன் காலத்தில் சயங்கொண்ட சோழமண்டலத்து, இராஜேந்திர சோழவள நாட்டுப் புழல்நாட்டு ஊர்களில் ஒன்றாய் விளங்கிற்று.
  • முதலாம் இராஜேந்திரனின் பிறந்த நட்சத்திரம் மார்கழித் திருவாதிரையாகும். இச்செய்தி அம்மன்னனது 31-ஆம் ஆண்டுக் கல்வெட்டில் காணப்பெறும். ``திருவொற்றியூருடைய மகா தேவர்க்கு ராஜேந்திரசோழர் திருநாள் மார்கழித் திருவாதிரை நாளன்று நெய்யாடியருளவேண்டு மிடத்து திருவொற்றியூர் திருமயான மடமுடைய சதுரானன பண்டிதன் தேவர் பண்டாரத்து வைத்தகாசு நூற்றைம்பது`` கல்வெட்டுப் பகுதியால் அறியக்கிடக்கின்றது.
  • இக்கோயிலில் வீரராஜேந்திரன் திருப்பள்ளியெழுச்சி, திரிபுவன வீரதேவன் சந்தி இவைகளுக்கு நிவந்தங்கள் அளிக்கப் பெற்றிருந்தன. இவற்றுள் திரிபுவன வீரதேவன் என்பது மூன்றாங் குலோத்துங்க சோழனுக்குரிய சிறப்புப் பெயராகும். அவன் பேரால் ஏற்படுத்தப்பெற்ற இச்சந்திக்கு குலோத்துங்க சோழவள நாடான புலியூர்க் கோட்டத்தில் சிவபாத சேகரநல்லூராகிய குளப்பாக்கத்தில் நூறுவேலி நிலம் விடப்பெற்றிருந்தது. இவ்வூரில் சாலியர்கள் வசித்து வந்த தெருக்கள், ஜெயசிங்ககுல காலப்பெருந்தெரு என்றும், இராஜராஜப்பெருந்தெரு என்றும், மன்றாடிகள் வசித்துவந்த தெருக்கள் திரிபுவனச் சுந்தரச்சேரி, திரிபுவனநகரத்தெரு என்னும் பெயர்களைப் பெற்றிருந்தன. மன்றாடிகள் என்பார் திருவிளக்குக் குடிகளாவார். இவர்கள் நுந்தா விளக்கினுக்கு விடப்பெறும் சாவாமூவாப் பசுக்களையோ அல்லது ஆடுகளையோபெற்று, உரிய திட்டப்படி, தவறாது நெய் அளப்போராவர். இக்கோயிலில் உத்தம சோழதேவர் காலத்தில் கவரிப்பிணாக்கள் இருபத்து நால்வரும், காளம் ஊதுபவர் எண்மரும் இருந்தனர்.
  • இக்கோயிலிலுள்ள கிரந்தக் கல்வெட்டுக்கள், ஒற்றியூரை ஆதிபுரி என்றும், இறைவரை, ஆதிபுரீஸ்வரர் என்றும் கூறுகின்றன. கங்க பல்லவவம்சத்து விஜயகம்பவர்மனின் 19ஆம் ஆண்டுக் கல்வெட்டு, ஒற்றியூரில் நிரஞ்சனீஸ்வரத்து மகாதேவருக்கு நிரஞ்சன குரவரால் கோயில் கட்டப்பெற்ற செய்தியை உணர்த்துகின்றது. சோழ நாட்டுத் தென்கரை நாட்டு, பொய்யில் கூற்றத்து சிறுகுளத்தூருடையான் மாறன் செம்பியன் சோழியவரையன், சீட்புலியையெறிந்து நெல்லூரை அழித்துத் திரும்பியவன் திருஒற்றியூர் மகாதேவர்க்குத் திருநுந்தா விளக்கு எரிப்பதன் பொருட்டு 96 சாவாமூவாப் பேராடுகளை அளித்தான் என்பதை மதுரை கொண்ட கோப்பரகேசரிவர்மனின் முப்பத்து நான்காவது ஆண்டுக் கல்வெட்டுத் தெரிவிக்கின்றது.

Contact Address

அமைவிடம் அ/மி. தியாகராசர்சுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை - 600 019. தொலைபேசி : 044 - 25733703, +91-9444479057. மாநிலம் : தமிழ் நாடு சென்னையின் ஒரு பகுதி. 'உயர்நீதி மன்றப்' பகுதியிலிருந்து திருவொற்றியூருக்கு அடிக்கடி நகரப் பேருந்து செல்கிறது. காலடிப்பேட்டையை அடுத்து, 'தேரடி' நிறுத்தத்தில் இறங்கினால் வீதியின் கோடியில் கோயிலைக் காணலாம். சென்னையின் முக்கியப் பகுதிகளிலிருந்தும் நகரப்பேருந்து வசதி உள்ளது.

Related Content

திருவலிதாயம் பாடி வல்லீஸ்வரர் ஸ்தலபுராணம் (சென்னை)

வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் கொடையிடைநாயகி திருக்கோயில

திருவேற்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு

திருமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தல புராணம்

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் தல வரலாறு