திருச்சிற்றம்பலம்
ஞான நாடகம் - 2
ஓரியூரினில் உகந்து இனிதருளிப்
பாரிரும் பாலகன் ஆகிய பரிசும்
காட்சி : 1
இடம் : விரூபாக்கன் இல்லம்
(விரூபாக்கனும் சுபவிரதையும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்)
விரூபாக்கன்: அங்கயற்கண்ணி உடனுறை சொக்கநாதப் பெருமான் திருவருள். எத்தனை காலம் தவமிருந்தோம்? நமக்கு மக்கட் பேறு வாய்ப்பதற்கு. நம் மகள் கௌரி வளர்வது கண்டு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா?
சுபவிரதை: அறிவில் மட்டுமல்ல; நம் மகள் கௌரி பண்பிலும் அன்பிலும் மிகச் சிறந்து விளங்குகிறாள். அவளை ஈன்ற என் உள்ளம் பூரிக்கிறது. எல்லாம் ஆலவாயண்ணல் பேரருள்.
(கௌரி ஓடிவந்து)
கௌரி: அப்பா! நீங்கள் மந்திரங்கள் வேதங்கள் எல்லாம் தெரிந்தவர் தானே? பிறவிக்கடல் நீத்து வீடுபேறு அடைந்திட எந்த மந்திரமப்பா செபிக்கவேண்டும்?
விரூபாக்கன்: என் கண்ணே! ஐந்து வயதில் உனக்கு இத்தனை ஞானமா? சொக்கநாதா! கூறுகிறேன் கண்ணே! (காதில் உபதேசிக்கிறார்.) எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு தெய்வமே உண்டு. அந்த தெய்வமே சிவமாகவும் சத்தியாகவும் காட்சியளிக்கிறது. அந்த சிவசக்தியாம் நம் அங்கயற்கண்ணி உடனுறை ஆலவாய் ஈசன் திருவடி தொழுதலே நம்மை உய்விப்பது. இதில் எந்த ஐயமும் வேண்டாம் குழந்தாய்!
கௌரி: சரியப்பா! அம்மையப்பர் திருவடிகளை எப்பொழுதும் வணங்கியிருப்பேன்!
காட்சி : 2
இடம் : விரூபாக்கன் இல்லம்
(கௌரி வளர்ந்து மணப்பருவம் எய்தினாள். வளர்ந்தது அப்பெண் மட்டுமல்ல. அவல் உள்ளத்தில் அங்கயற்கண்ணி ஆலவாய் அண்ணலுக்கு அன்பும் தான். அவள் பேரழகையும் இறைவர் திருவடி மேல் வைத்த அன்பையும் கண்ட அவள் பெற்றோர்களும், உறவினர்களும், அவளுக்கு சிவபக்தியிற் சிறந்த கணவன் அமைய வேண்டும் என்ற ஆவலில் இருக்கின்றனர். அப்போது ஒருநாள் ஓரியூரைச் சார்ந்த ஒரு வைணவ பிரமசாரி பிச்சை ஏற்று வருகிறான்.)
வை.பி: பவதி பிட்சாம் தேஹி!
விரூபாக்கன்: ஆகா! பிரமசாரி பிட்சை கேட்டு வந்துள்ளான். இவனுக்குக் கன்னிகாதானமாக என் மகளை அளிக்கிறேன். (கரக நீரைக் கையில் சொரிகிறான்.) ஏ பிரமசாரியே, உனக்கு என் மகளை மனைவியாக கன்னிகாதானமாக அளித்தேன்!
சுபவிரதை: என்ன காரியம் செய்தீர்கள்! நம் மகளை எவ்வளவு பாராட்டிச் சீராட்டி வளர்த்தோம். என்ன யார் என்று ஒன்றுமே விசாரிக்காமல் கன்னிகாதானம் செய்கிறீர்களே!
உறவினர்: உனக்குப் புத்தி பேதலித்துவிட்டதா? இப்படித்தானா அருமையாக வளர்த்த மகளுக்குத் திருமணம் செய்வது? நம் கௌரி சிவபெருமான் உமையம்மையிடம் எத்தனை அன்புடையவள்! இந்த பிரமசாரியோ சிவவழிபாடை நினைபவன் போலக் கூட இல்லை. வினைப்பயன் தான் இவ்வாறு உன்னைச் செய்யச் செய்ததோ! சிவ சிவ!!
உறவினர் மற்றொருவர்: சிவ வழிபாடு இல்லாத ஒன்றே அப்பிரமசாரியிடம் குறையாகத் தோன்றுகிறது. எனவே விரூபாக்கன் கரக நீர் வார்த்ததால் வேறு வழியின்றி நம் செல்வம் கௌரியை அப்பிரமசாரிக்குத் தான் கொடுத்தாக வேண்டும். பிச்சைக்காரனுக்குக் கிடைத்த பொன்முடிப்பு!
(கௌரியை அப்பிரமசாரியுடன் அனுப்புகின்றனர்.)
காட்சி : 3
இடம் : ஓரியூரில் கௌரியின் புகுந்த வீடு
கணவன்: அம்மா அப்பா!
மாமி: என்னடா போடா! பிச்சைக்குப் போய் வந்தாயா, அவ்வளவு தானே! வருகிறேன்.
கணவன்: இல்லையம்மா, இங்கே வந்து பார்! செல்வம் மிகுந்த ஒரு அழகுக் கன்னியை மணமுடித்து வந்திருக்கிறேன்.
மாமி, மாமன்: உனக்கு யாரடா பெண் கொடுத்தார்கள்! (ஓடி வருகின்றனர். காலிருந்து பார்த்து) அடடே! பட்டு சேலை. தங்க ஒட்டியாணம், பங்கத்திலேயே பொண்ணை புதைச்சு வைச்சுக் கொடுத்திருக்காங்களே! (முகத்தைப் பார்த்து) ஆஆ! இது என்னடா! சாம்பலைப் பூசியிருக்கா!
கௌரி: சிவ சிவ! அம்மா, வேதம் இறைவனைத் திருநீறு பூசி வெளுத்த மிடறை உடையவன் என்று புகழ்கின்றன. உபநிடதங்கள் திருநீற்றை அல்லவா உள்ளத்தின் மாசு கழுவும் எனப் பேசுகின்றன. திருநீறு பூசாதவர்களால் செய்யப்படும் எத்தகு வேள்வியும் பயனற்றது என்றல்லவா முனிவர்கள் கூறியுள்ளனர். திருநீற்றை இகழ வேண்டாமம்மா!
மாமி மாமன்: ஆஆ! இந்தக் கழுதை எனக்கே சாணிச்சாறைப் பத்திச் சொல்றா! சுடுகாட்டிலே ஆடுறவனைக் கும்பிடுவாள் போலருக்கே!
கௌரி: சிவ சிவ! அம்மா! என் வணக்கதிற்குரிய மாமியாகிய நீங்கள் இவ்வாறு சிவநிந்தனையால் நரகம் புகுந்துவிடக்கூடாது என என் மனம் துடிக்கிறது. அம்மா! மறைகள் ஈசுவரன் - உடையவன் என்று கூறும் அந்த ஈசுவரன் என்ற சொல் சிவபெருமானையல்லவா குறிக்கும்? காயத்திரி மந்திரத்திற்குப் பொருளாகவும், பிறப்பு இறப்பு இல்லாதவராக இருந்து, வீடுபேறு அருளக்கூடிய ஒரே இறைவன் சிவபெருமான் அல்லவா! அவரை நீங்கள் நன்றாக இருத்தல் பொருட்டு என்றும் நிந்திக்காதீர்கள் அம்மா!
மாமி: டேய்! இவளையாடா கட்டிட்டு வந்த? அவளை அந்த மூலைல தள்ளு! நல்லா கல்யாணம் கட்டிட்டு வந்திருக்கான்!
கௌரி: சிவபெருமானே! அன்னையே!
- திருச்சிற்றம்பலம் -