logo

|

Home >

articles >

maduraik-kalambakam-jayalakshmi

மதுரைக் கலம்பகம் - கட்டுரை

எஸ். ஜயலக்ஷ்மி

     பலவகை மலர்கள் கலந்த மாலையைக் கலம்பக மாலை என்று சொல்லலாம். பல வகைப் பொருட்களும், அகத்துறை சார்ந்த பாக்களும் பலவகை யாப்புக்களும் கலந்ததால் கலம்பகம் என்று பெயர்.

     இக்கலம்பகத்தை இயற்றிய வர் குமரகுருபர ஸ்வாமிகள். இவர் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் என்னும் ஊரில் சுமார் 650 வருடஙளுக்கு முன்  பிறந்தவர்.  5 வயது 
வரை வாய் பேசாமல் இருந்தவர், திருச்செந்தூர் முருகன் அருளால் ஊமை நீங்கப் பெற்று, ”கந்தர் கலி வெண்பா” பாடினார். மதுரை சென்ற சமயம் அங்கு கோயில் கொண்டிருக்கும் மீனாக்ஷி அம்மையின் மேல் மீனாக்ஷி பிள்ளைத்தமிழ் பாடினார். மதுரைக் கலம்பகமும் இயற்றினார்.

     இக்கலம்பகம் பல உறுப்புக்களைக் கொண்டு விளங்குகிறது. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம். மதங்கியார்,  பிச்சியார், கொற் றியார், இடைச்சியார், வலைச்சியார் என்றும் ,அறம், குறம், சித்து, களி, ஊர் அம்மானை, ஊசல் என்னும் உறுப்புக்கள் இதில் இடம் பெறுகின்றன.

மதங்கியார்

     மதங்கியார் என்பவள் வாள் சுழற்றி ஆடுபவள்.

பிச்சியார்

     பிச்சியார் என்பவள் சிவ வேடம் புனைந்து ஆடுபவள்.

கொற்றியார்

     வைணவ வேடம் பூண்டு வருபவள்.

     இந்த உறுப்புக்களில் அந்தந்த மகளிருடைய தொழிலுக்குரிய செய்திகளை அமைத்துப் புலவர்கள் பாடியிருக்கிறார்கள். இவை தவிர மறம், குறம், சம்பிரதம், சித்து, களி, ஊர், அம்மானை, ஊசல், என்னும் உறுப்புக்களும் இடம் பெறும்.

மறம்

     மறம் என்பது மறச்சாதி மகள் ஒருத்தியை, ஒரு மன்னன் மணம் பேசி தூதன் ஒருவனை அனுப்ப அத் திருமுகத்தைக் கொணர்ந்த தூதனை, அம்மறச் சாதியின் தலைவன் சினந்து கூறுவது.

குறம்

     குறத்தி குறி சொல்வது குறம்.

சம்பிரதம்

     பிறர் செய்ய முடியாத செயல்களைத் தான்செய்வதாகச் சொல்வது சம்பிரதம்

சித்து

     இரசவாதம் செய்யும் வல்லமை உள்ளவனாக ஒருவன் தன்னைக் கூறிக் கொள்வது சித்து.

களி

     கள் குடிப்பவன் கூறுவது களி.

ஊர்

   பாட்டுடைத் தலைவனுடைய ஊரைச் சிறப்பித்துப் பாடுவது ஊர் எனப்படும்.

அம்மானை

     மூன்று பெண்கள் ஒருவருக்கொருவர் கேள்வியெழுப்பிய வண்ணம் அம்மானைக் காய்களை வைத்து விளையாடுவது.

ஊசல்

     பெண்கள் ஊசல் ஆடுவது ஊசல்.

     இக்கலம்பகத்திலுள்ள சில பகுதிகளைப் பார்ப்போம். விநாயகரின் சேவடியை வந்தித்து வாழ்த்தி, முடிதாழ்ந்து வணங்கி சிந்தித்து மதுரைக் கலம்பகம் தொடங்குகிறார் குமரகுருபரர்.

ஐயனின் எளிமை

     அங்கயற்கண் அம்மையோடு செம்பொன் மதில் தவழும் தமிழ்க்கூடலான மதுரையில் வீற்றிருக்கும் பெருமானே! தேவலோக அரசு ரிமை, பிரமலோகம், வைகுண்டலோகம் முதலிய உலகங்களின் அரசுரிமைகளை யெல்லாம் முறையே இந்திரன், பிரமன், திருமால் முதலான தேவர்களுக்கு அளித்து விட்டு ஒரு பெண் [மீனாக்ஷி] அரசுரிமையைக் கொண்டு பேரரசு செலுத்துகிறாயே!

     தேன் சொரியும் கற்பக மலர் மாலையை இந்திரனுக்கு வழங்கி விட்டு வேப்பம் பூக்களில் தொடுக்கப்பட்ட கண்ணியைத் தலையில் சூடுவதேன்?

     இந்திரனுக்கு அசனியைக் [இடி] கொடியாகக் கொடுத்து  பிரமனுக்கும் திருமா லுக்கும் அன்னம் கருடன் ஆகியவற்றைக் கொடியாகக் கொடுத்திருக்கிறாய். ஆனால் உனக்கோ? மீன் கொடி! ரிஷபக்கொடி! போகட்டும் வேதமாகிய குதிரை இருக்க அதை விடுத்து பாண்டியர்களின் குதிரையா கிய கனவட்டம் வட்டமிடுவதைக் கண்டு களிக்கி றாயே!

     பாய்ந்தோடும் கங்கையாலும் நனையாத உன் சடைமுடி, வையை, பொருனை என்ற சிற்றாறுகளில் நீராடி நனைவது பொருத்தமா? வேதங் களின் சுவையை உணர்ந்த நீ புத்தமுதம் வழிந்தொழு கும் கன்னித் தமிழின் மழலையையும் கேட்கிறாயே! என்னே உன் எளிமை!

 1.      விண்ணரசும் பிறவரசும் சிலரெய்த 
                    விடுத்தொரு நீ
        பெண்ணரசு தரக் கொண்ட பேரரசு 
                    செலுத்தினையே!
 2.      தேம்பழுத்த கற்பகத்தின் நறுந்தெரியல்
                சிலர்க்கமைத்து
         வேம்பழுத்து நறைக்கண்ணி முடிச்சென்னி
                மிலைச்சினையே!
3.        வானேறுஞ் சில புள்ளும் பலர் அங்கு
                வலன் உயர்த்த
         மீனேறோ வானேறும் விடுத்து
                அடிகள் எடுப்பதே!
4.        மனவட்டமிடுஞ் சுருதி வயப்பரிக்கு
                மாறன்றே
          கனவட்டம் தினவட்டமிடக்கண்டு
                களிப்பதே!
5.         விண்ணாறு தலைமடுப்ப நனையா நீ
                விரைபொருனைத்
        தண்ணாறு குடைந்து வையைத்
                தண் துறையும் படிந்தனையே!
6.        பொழிந்தொழுகு முது மறையின் சுவை   
                    கண்டும், புத்தமுதம்
        வழிந்தொழுகும் தீந்தமிழின் மழலை
                செவி மடுத்தனையே!

என்று சொக்கநாதப் பெருமானின் எளிவந்த தன் மையை வியக்கிறார்.

     [விண்ணரசு----தெய்லோக அரசுரிமை.   பிற அரசு---பிரம லோகம் வைகுண்டம் முதலியவற்றின் அரசுரிமை.   பெண்ணரசு---அங்கயற்கண் அம்மை. கற்பகத்தின் நறுந்தெரியல்---கற்பக மலர்மாலை. சிலர்----இந்திரன்.     கண்ணி---தலையில் சூடுவது.  வானேறு----இடி.  சிலபுள்—அன்னமும் கருடனும்.  மீனேறு—ஆண்மீனை வரைந்த கொடி.  ஆனேறு—விடைக்கொடி.  சுருதி---வேதம்.  மாறு அன்றே—விரோதமல்லவா?  கனவட்டம்---பாண்டியர்களின் குதிரை.  விண்ணாறு---கங்கை.  தமிழின் மழலை—தமிழாகிய மழலைச்சொல்]

புயவகுப்பு

     பாட்டுடைத் தலைவனுடைய தோள் வலிமையை மிகுத்துக் கூறுவது புயவகுப்பு

     ஐயனின் மலையொத்த தோள் களை வணங்கி புயவகுப்பு பாடுகிறார். ஐயனே! தாரு காவன முனிவர்கள் ஏவி விட்ட யானையின் தோல் போர்வையாக உன் தோள்களில் அலங்கரிக்கிறது. அவர்கள் ஏவிய புலியின் தோலை உன் இடுப்பில் ஆடையாக அணிந்திருக்கிறாய். தூணிலிருந்து உக்கி ரமாக ஆக்ரோஷத்துடன் வெளிப்பட்ட நரசிங்கத்தின் வலி அடக்கி உன் தோள்கள் பூரித்தன. அதே புயங்கள் திருக்கோலக்கா என்னும் தலத்தில் ஞான சம்பந்தப் பெருமானுக்குப் பொன் தாளம் வழங்கின. மிகவும் பெருமையோடும், கர்வத்தோடும் இடியென ஆரவார மிட்டு வந்த ஏமநாதனைத் தோற்கடிப்பதற்காக உன் திருப்புயங்கள் விறகு சுமந்து, சாதாரிப் பண் பாடி மதுரையை விட்டே அவன் ஓடும்படி செய்து பாண பத்திரனின் மானம் காத்தது.

     அதே புயங்கள் வந்தி என்ற கிழவி தந்த பிட்டைக் கனிவோடு ஏற்று அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட கரையை சரிசெய்யக் கூடையில் மண் ணும் சுமந்தன. அதுமட்டுமா? உருவிய வாளுடன் 
வந்த பாண்டிய மன்னனின் பிரம்படி பட்டு நடுங்கின. தடாதகைப் பிராட்டியத் தழுவிய சுந்தரேசன் பொற் புயங்கள் இவ்வளவு திருவிளையாடல்களையும் நிகழ்த்தின.

     பொரு சமரிடை யெதிர் பிளிறும் ஓர் களிறு
    பிளந்தொரு போர்வை புறஞ்சுற்றி நின்றன
    புகையெழ அழல் உமிழ் சுழல் விழி உழுவை
    வழங்கும் ஓராடை மருங்குற்கு அணிந்தன
    புல எயிறு அயில் தரு குருதியொடு உலவு
    மடங்கலின் வீரம் ஒடுங்கத் துரந்தன
    புகலியர் குரிசில் பண்ணொடு தமிழ் அருமை
    அறிந்தொரு தானம் வழங்கப் புகுந்தன
    உருமிடி யென வெடி பட எதிர் கறுவி
    நடந்தொரு பாணன் ஒதுங்கத் திரிந்தன.
    உருகிய மனமொடு தழுவி ஓர் கிழவி
    கருந்துணி மேலிடு வெண்பிட்டுகந்தன
    உறுதியொடு அவள் மனை புகும் வகை கடிது
    சுமந்தொரு கூடை மண் உந்திச் சொரிந்தன
    உருவிய சுரிகையொடு எதிர்வரு செழியன்
    பிரம்படி காண நடுங்கிக் குலைந்தன
    தமிழ் மதுரையில் ஒரு குமரியை மருவு
    சவுந்தர மாறன் தடம்  பொற் புயங்களே.

     [களிறு—தாருகாவன முனிவர் ஏவிய யானை.  போர்வை---யானைத்தோலாகிய போர்வை.  உழுவை—முனிவர்கள் ஏவிய புலி.   மடங்கல்---சிங்கம்; இங்கே நரசிங்கம்.  புகலியர் குரிசில்----திருஞான சம்பந்தர். வெடி---ஓசை.  கறுவி—கோபித்து.  நடந்த ஒரு பாணன்---ஏமநாதன்.   ஒதுங்க----ஓட.  ஓர் கிழவி—வந்தி என்ற கிழவி.  மனை—அடைப்பதற்காக அரசால் ஒதுக்கப்பட்ட இடம்.  சுரிகை--உடைவாள்.

என்று ஐயனின் புயவலிமையைப் போற்றுகிறார். குமரகுருபரர்

மதங்கியார்

     இரு கைகளிலும் வாட்படைகளை ஏந்தி வீசிப் பாடி ஆடும் ஒரு மதங்கர் சாதி மங்கையை நோக்கி ஓர் இளைஞன் சொல்வது மதங்கியார். மதங்கர் என்பவர் இசைக்கும் கூத்துக்கும் உரிய ஒரு சாதியர்.

     கடம்பவனம் என்று பெயர் பெற்ற மதுரை நாயகர் சுந்தரேசர் முன் வாள் சுழற்றி விளை யாடும் மின்னல் கொடி போன்றவளே! உன் கண்கள் இரண்டும் என் உயிரை கொள்ளை கொள்கின்றன.உன் நூபுரங்கள், உன்நூல் போன்ற இடை இற்று விடுமோ என்று முறையிடுகின்றன. என் நெஞ்சு அலமறும்படி வாளைச் சுழற்றுகிறீர் உன்னுடைய வேல் போன்ற இரண்டு கண்களுமே என் உயிரைக் கவரப் போதுமே! அப்படியிருக்க இரண்டு வாள்களை வேறு சுழற்ற வேண்டுமோ? என்கிறான் ஓர் இளைஞன்.

    எறி வேல் இரண்டும் எனதாருயிர் சோர
        உண்டு உலவ, இகல் வாளிரண்டு விசிறா
    வெறிசேர் கடம்பவன மதுரேசர் முன்குலவி
        விளையாடும் மின் கொடியனீர்!
    சிறு நூல் மருங்குல் இறும் இறுமா கொல்? 
        என்று சில சில நூபுரம் சொல் முறையீடு
    அறியீர் என் நெஞ்சும் அலமரவே சுழன்றிடு
        நும் அதிவேகம் நன்ற அறவுமே
  
      [எறிவேலிரண்டு—கண்கள்.  விசிறா—விசிறி.  வெறி----நறு மணம். நூபுரம்—சிலம்பு.]

பிச்சியார்

     சிவ வேடம் புனைந்து பிச்சை வாங்கச் செல்பவள் பிச்சியார். சிவபெருமானுக்கும் பிச்சியாருக்குமுள்ள ஒற்றுமையைச் சுட்டிக் காட்டு கிறார் புலவர்

     ஐயன் வெள்ளியம்பலமாகிய மதுரையில் தூக்கிய திருவடியாகிய இடது பாதத்தை ஊன்றி கால்மாறி ஆடுகிறார்.வீடுகள் தோறும் பிச்சை வாங்கப் பிச்சனைப்போல் செல்கிறார். அவருடைய கடைக்கண் பார்வையில் மன்மதன் எரிந்து சாம்பலா னான். அவர் சிரிப்போ முப்புரங்களையும் எரித்தது.  காபாலி என்று பெயர் கொண்ட அவர் கையில் சூலம் ஏந்தியிருக்கிறார்.

     பிச்சியாரும் சிவவேடங் கொண்டு வீடுதோறும் பிச்சை எடுக்கிறார். இவரும் கால்மாற்றி ஆடுகிறார். இவருடைய கண்பார்வையும், புன் சிரிப்பும் மற்றவர்களைக் கொல்லாமல் கொல்கிறது. பிச்சியாரும் கையில் சூலம் தாங்கிச் செல்கிறார் .இருவருக்கும் பல ஒற்றுமைகள் இருப்பது கண் கூடு. சிவபெருமானுக்குப் பிச்சன் என்று பெயர் இருப்பதால் இவருக்குப் பிச்சியார் என்று பெயர் வழங்குவது பொருத்தமே.

    அடுத்ததோர் தவ வேடமும் புண்டரம் அணிந்த
        முண்டமுமாய் வெள்ளியம்பலத்து
    எடுத்த தாள் பதித்[து]  ஆடிக் கடைப் பிச்சைக்கு
        இச்சைக்குப் பேசும் அப்பிச்சன் எனச் செல்வீர்
    கடைக்கண் நோக்கமும் புன்மூரலும் உயிர்
        கவர்ந்து கொள்ள விடுத்த கபாலி போல்
    பிடித்த சூலமும் கைவிட்டிலீர் என்றோ
        பிச்சியார் எனும் பேர் உமக்கிட்டதே?

     [புண்டரம்—திருநீறு.  முண்டம்—நெற்றி.  கடை---வீட்டு வாயில்கள்.  நோக்கம்---மன்மதனை எரித்தது.  மூரல்---முப்புரத்தை எரித்தது]

என்று இருவரையும் ஒப்பிடுகிறார்.

மறம்

     மறக்குடியில் பிறந்த பெண் ஒருத்தியை மணம் செய்து கொள்ள விரும்பிய அரசனிடமிருந்து வந்த தூதனைப் பார்த்து பெண்ணின் தந்தையாகிய மறவன் கூறுவது இது.

     "கற்பக மரத்தை விட உயர்ந்த உச்சியை உடைய மாடங்கள் நிறைந்த கூடல் நகர பாண்டியர் குடியில் வந்தவர்கள் நாங்கள். எங்களோடு செய்த போரில் எதிர் நிற்க முடியாமல் ஒருகோடி மன்னர்கள் மடிந்தார்கள்."

     "தூதனே! உன்னை இங்கு அனுப்பிய மன்னன் யார் எங்கள் பெண்ணை மணம் செய்ய விரும்பிய மன்னன் கொடுத்தனுப்பிய ஓலை யைக் கொண்டு வந்தாய். திருமுகத்தில் எழுதப்பட்ட விஷயம் இது என்றால் அவன் திருமுடியில் எழுதப் பட்டிருக்கும்  அவன் தலையெழுத்தையும் தெரிந்து கொள்ள அவ்வரசனுடைய தலையை வெட்டிக் கொண்டு வா” என்று சினந்து கூறுகிறான்.

   தருமுகத்து நிமிர்குடுமி மாடமலி கூடல்
   சவுந்தர பாண்டியர் குடியாம் சமரினிடைஆற்றாது
   ஒரு முகத்தில் ஒரு கோடி மன்னர் மடிந் தொழிந்தார்
   உனை விடுத்த மன்னர் யார்? உரைத்திடுவாய் தூதா!
   மருமுகத்த நெறிக் குழல் எம்மறக்கொடியை வேட்பான்
   மணம் பேசி வரவிடுத்த வார்த்தையது சொன்னாய்
   திருமுகத்தில் எழுத்து இதுவேல் திருமுடியில் எழுத்தும்
   தேர்ந்தறியக் கொண்டுவா சிகையினொடும் சென்றே.

     [தருமுகத்து நிமிர் குடுமி---கற்பக மரத்தை விட உயரமான உச்சியையுடைய….   திருமுகத்தில் எழுத்து-----ஓலையிலுள்ள எழுத்து.  திருமுடியில் எழுத்து----தலையெழுத்து.  சிகை—குடுமி]
 
     இங்கு அம்மறவனுடைய குடிப்பெருமையயும், மன்னனுக்கு அஞ்சாத தன்மையையும் பார்க்கிறோம்.  அப்பெருமையில் கட்டளைப் பிறப்பிக்கிறான்.

குறம்

     ஒரு தலைவிக்குக் குறி சொல்கிறாள் குறத்தி. அம்மே! மதுரைத் தேவரான சுந்தரேசர் மணம் செய்த தடாதகைப் பிராட்டிக்குக் குறி சொன்னவள் நான். உனக்கும் குறி சொல்வேன். உன் கையைக் காட்டு என்று சொல்லும் போதே ஒருவர் தும்மல் போட தும்மலும் நல்ல சகுனம் தான் என்கிறாள் இதன் பின் தலைவி ஒரு சுளகில் நெல்லைக் கொட்டு கிறாள். அந்த நெல்லை எண்ணிப் பார்த்துக் குறி சொல்கிறாள் குறத்தி. ”அம்மே! நீ நினைத்த பொருள் கை கூடும்” என்கிறாள். அப்பொருள் என்னவென்றால் முத்தாலாகிய கச்சணிந்த அம்மையின் முலைத்தழும் பும், வளைத்தழும்பும் குறியாக ஐயன் பெற்றதே ஆகும். 

     அம்மை (காமாக்ஷியாக) காஞ்சியில் தவம் செய்த போது மண்ணால் சிவலிங்கம் செய்து வழிபட்டு வந்தாள். வேகவதி ஆற்றில் வெள்ளம் வந்தபோது சிவலிங்கத்தைப் பாதுகாப்பதற்காக அதை இறுகத் தழுவிக் கொள்கிறாள். அப்போது அவளுடைய முலைத்தழும்பும், வளைத்தழும்பும் இறைவன்மேல் அழுத்தமாகப் பதிந்ததன. இந்த வரலாற்றையே குறத்தி சொல்கிறாள். அம்மைக்குக் கிடைத்த பேறு உனக்குக் கிடைக்கும் என்று சொல்கிறாள்.

    செல்லிட்ட பொழின் மதுரைத் தேவர்
        மணம் தடாதகா தேவிக்(கு) அன்று
    சொல்லிட்ட குறமகள் யான், தும்மலும்
        நல்வரத்தே காண், சுளகில் அம்மை
    நெல்லிட்ட குறிக்கு நீ நினைந்ததொரு பொருள்
        அது நித்திலக் கச்சார்க்கும்
    வல்லிட்ட குறியினொடும் வளையிட்ட
        குறியுளதோர் வடிவுதானே.
 
     [செல்---மேகம்.  சொல்லிட்ட—சொல்லிய.  வரத்து—வரவு.  சுளகு—சிறு முறம்.  நித்திலக் கச்சு---முத்தாலாகிய கச்சு.  வல்---அம்பிகையின் நகில்]

     "அம்மே! நீ நினைத்தபடியே ஐயனைச் சேர்வாய்" என்கிறாள்.

மதுரை மகளிர்

     மதுரை நகரில் பால்போல் நிலா வீசும் முற்றங்களிலே பெண்கள் அம்மானை ஆடு கிறார்கள். அவர்கள் அணிந்திருக்கும் பூமாலைகளிலிருக்கும் வண்டுகள் ராகம் பாடுகின்றன. பெண்களுடைய கூந்தலிலுள்ள மலர்களில் தேன் கொப்பளிக்கிறது. முத்துப் பந்தலில் அம்மானை ஆடும் பெண்கள் கண் இமைக்காமல் அம்மானைக் காய்களையே பார்த்து விளையாடுகிறார்கள். அவர்கள் தேவலோகத்துப் பெண்களோடு விளையாடும்போது அப்பெண்களுக்கு இடை இருக்கிறதா இல்லையா என்ற கேள்வி பிறக்கிறது புலவருக்கு. இப்பொழுது இவர்கள் கண் இமைக்காமல் ஆடுவதாலும் இவர்களுடைய பேரழகாலும் இவர்களுக்கும் தேவ மகளிருக்கும் வேற்றுமை தெரியவில்லையாம்! மதுரைப் பெண்கள் தேவமகளிர்போல் தோற்றமளிப்பதால் தேவர்களுக்கே மதுரைப் பெண்களுக்கும் தேவமகளிருக்கும் வேற்றுமை தெரியவில்லை.
            
    பமரம் யாழ் மிழற்ற நறவு கொப்பளிக்கும்
        பனிமலர்க் குழலியர் பளிக்குப்
    பால் நிலா முன்றில் தூநிலா முத்தின்
        பந்தரில் கண்ணிமையாடா(து)
    அமரர் நாடியரோ(டு) அம்மானையாட
        ஐயம் நுண் நுசுப்பளவு அல்ல என்(று)
    அமரரும் மருளும் தெளி தமிழ்க் கூடல்
        அடல் அரா, அலங்கல் வேணியனே.

     [பமரம்—-பிரமரம், வண்டு.  நறவு—தேன்.  குழலியர்—மதுரையிலுள்ள மகளிர்.  அமரர் நாடியர்—தெய்வ மகளிர்.  அரா—அரவு, பாம்பு.  ஐயம்—சந்தேகம்.  நுண் நுசுப்பு—நுண்ணிய இடை]

மதுரை மகளிரின் அழகு, நாகரிகம். அம்மானையாடும் திறம் முதலியவற்றைப் பாராட்டுகிறார்.

அம்மையின் சங்கடம்

     அம்மை தலை கவிழ்ந்து நிற்பது நாணத்தாலா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று ஆராய்கிறார் புலவர். சொக்கநாதப் பெருமானிடமே கேட்டுவிடுகிறார்.

     மீனக்கொடியையும் திருமாலை ரிஷபக் கொடியாகவும் கொண்ட அழகிய சொக்கநாதரே! கர்ப்பூர வல்லியாகிய அம்மை முப்பத்திரண்டு அறங்களையும் செய்கிறாள் ஆனால் அவள் கணவராகிய நீரோ? புலால் நாறும் பிரும்ம கபாலத்தில் வீடுகள் தோறும் சென்று பிச்சை எடுக்கிறீர். இதை எண்ணித்தான் அம்மை தலைகவிழ்ந்து நிற்கிறாளோ என்று தன் சந்தேகத்தைப் பெருமானிடமே கேட்பதைப் பார்ப்போம்

    ஆனேறும் வலனுயர்த்த அழகிய சொக்கர்க்கு
        இதுவும் அழகிதேயோ?
    கானேறும் குழல் சரியக் கர்ப்பூரவல்லி
        தலை கவிழ்ந்து நிற்ப
    ஊனேறு முடைத்தலையிற் கடைப்பலி கொண்டு
        ஊரூர் புக்கு உழலுமாறே.
    
     [ஆனேறு—திருமாலாகிய ரிஷபம்.  கான்----நறுமணம்.  கர்ப்பூரவல்லி—அம்பிகை.  ஊனேறு முடைத்தலை==புலால் நாறும் தலை, பிரம கபாலம்.  கடைப் பலி----வாயில்கள் தோறும் வாங்கும் பிச்சை]

என்று ஐயனிடமே கேள்வியெழுப்புகிறார்.

மடக்கு

     ஒரே வார்த்தை வெவ்வேறு பொருளில் மடக்கி வருவது மடக்கு எனப்படும். சோம சுந்தரக் கடவுளுக்கு நடன சாலையாக (அரங்கமாக) விளங்குவது, வெள்ளியம்பலமான மதுரை. ஐயனைத் தவிர பிற பொருட்களை வெறுத்தவர்களுடைய மனமும் அரங்கமே. (ஆலயமே) ஐயன் மார்பினில் அணியும் அணிகலன்கள் எலும்பு, அரவு, ஆமை முதலியன. (என்பு+ ஆமை+ ஆமை=என்பரவாமை) மக்கள் என்னை, (ஐயனை)ப் பரவாமல் இருப்பது அறியாமையால். (என்பரவாமை) அறிந்திருந்தால் பரவியிருப்பார்கள். (தோத்திரம் செய்திருப்பார்கள்.)

     இறைவன் விரும்புவது மா (மகா) கவியான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் போன்ற மகா கவிகளின் தேவாரப் பாடல்களை. (மா=கவி+மானமே). அவர் விரும்பி வீற்றிருப்பதும் மாக விமானமே (இந்திர விமானமே) மாக+விமானமே ஐயனுடைய இருப்பிடம் (ஸ்தானம்) வளைந்த மதில்களையுடைய மதுரை. இயற்கையாக இருப்பது நான்மாடக்கூடலான மதுரை. செயற்கையாக இருப்பது வெள்ளிமலை.

    அரங்கம் ஐயற்கு வெள்ளி அரங்கமே
        ஆலயம் பிற எள்ளியர் அங்கமே
    உரங்கொள் பல்கலன் என்பு, அரவு, ஆமையே
        உணர்வுறாமையும் என் பரவாமையே
    விரும்பு பாடலும் மா கவிமானமே
        மேவும் மானமும் மாக விமானமே
    திருந்து தானம் தடமதிற் கூடலே
        செயற்கை வெள்ளித்தட மதில் கூடலே.

     [அரங்கம்—நடன சாலை.  அங்கம்—மனம்.  பிற எள்ளியர் அங்கம்---சிவபெருமானையன்றிப் பிற பொருட்களை வெறுத்தவர்களுடைய மனம்.  உரம்—வன்மை, மார்பு.  மானம்—பெருமை.  மேவும் மானம்—விரும்பி வீற்றிருந்தருளும் விமானம்.  மாக விமானம்---இந்திர விமானம்.  தானம்—இருப்பிடம்.  தடமதில் கூடல்---வளைந்த மதில்களை உடைய மதுரை.  வெள்ளித் தடம்—வெள்ளி மலை, கைலாயம்]

     இப்பாடலில் அரங்கம், என்பு, அரவு, ஆமை, விமானம் கூடல் என்ற சொற்கள் இரு பொருள்களோடு மடங்கி வருவதைக் காணலாம்.

மேகவிடு தூது

     மதுரைச் சொக்கநாதர் மேல் காதல் கொண்ட தலைவி மேகத்தைத் தூதாக விடுத்துத் தன் காதலைத் தெரிவிக்கிறாள்.

     மேகங்களே! பொன்னாலான மேருமலைக்கும் கயிலாய மலைக்கும் சமமான தென்று பொதிய மலையில் எழுந்தருளியிருக்கும் பெருமான் தடாதகைப் பிராட்டியின் மனம் கவர்ந்தவர். முச்சங்கங்களும் முத்தமிழும் வளர்ந்த பெருமையுடையது மதுரை. சந்தன மரங்கள் மிகுந்த பொதியமலைச் சாரலில் தாமரையில் கண் துயிலும் திருமால் போல மலையில் படியும் மேகங்களே! இந்த பிறைச் சந்திரனும் குயில் குஞ்சுகளும் காதலால் தவிக்கும் என் உயிரைப் போக்குகின்றனவே! இதை அந்தப் பெருமானிடம் சொல்லுங்கள் இந்தப் பிஞ்சும் குஞ்சுமே இப்படி உயிரை எடுக்குமென்றால் இவை பெரிதாக வளர்ந்தால் என்னவெல்லாம் செய்யுமோ? எனக்கு அச்சமாயிருக்கிறதே என்கிறாள் தலைவி.

    ஏம வெற்பென்று கயிலாய வெற்பென்று
        மலயாசலத்தென்றும் உறைவார்
    கோமகட்கு அன்பர் மதுரேசர் முச்சங்கம் வளர்
        கூடலிற் சென்று புகலீர்
    தாமரைககண் துயிலும் மாலெனச் சந்தமலி
        சாரலில் துஞ்சு முகில்காள்
    மாமதிப் பிஞ்சும் இரைதேர் குயில் குஞ்சும்  
        உயிர்வாய் மடுத்து உண்டு ஒழிவதே.
 
     [ஏம வெற்பு—மேருமலை.  ஏமம்—பொன்.  மலயாசலம் பொதியமலை.  கோமகட்கு அன்பர்—அரசியாகிய தடாதகைப் பிராட்டியாருக்குக் கணவர்.  முச்சங்கம் வளர் கூடல்----இயல், இசை, நாடகமென்னும் மூன்று தமிழுக்கும் உரிய சங்கங்கள் வளர்ந்த மதுரை.  சந்தமலிசாரல்---சந்தன மரங்கள் மிக்க மலைச் சாரல்.  மதிபிஞ்சு—பிறை நிலா.  உயிர்—என் உயிர்]

என்று தன் காதலைச் சொல்லி வருமாறு மேகங்களைத் தூதாக விடுக்கிறாள் தலைவி.

புலவரின் ஏக்கம்

     அம்மையப்பருக்கு நடுவில் சோமாஸ் கந்தனாக வீற்றிருக்கும் முருகப் பெருமானைப் பார்த்ததும் புலவருக்கு ஒரு ஏக்கம் தோன்றுகிறது. அதை வெளிப்படயாகவே ஐயனிடம் தெரிவிக்கிறார். பிறையைச் சடையில் வைத்த பெருமானே! நீண்ட பெரிய கண்களையுடய உமாதேவியருடன் வீற்றிருக்கும் பொழுது, குழலினும் யாழினும் இனிய மழலை மொழி பேசும் முருகனை மடியிலிருத்தி உள்ளம் பூரிக்க உச்சி முகந்து அணைத்துக் கொஞ்சுகிறீர்கள். நீங்கள் இருவரும் உலகத்துக்கே தாய் தந்தை அல்லவா?

     அதனால் தானே நாரதர் கொடுத்த மாங்கனியை, அம்மையப்பனாகிய உங்களை வலம் வந்து விநாயகர் பெற்றார்? உலகையெல்லாம் பெற்ற உங்களுக்கு உலக மக்கள் எல்லோருமே குழந்தைகள் தானே? அப்படியிருக்க முருகனை மட்டும் மடியிலிருத்திக் கொஞ்சுவது பட்சபாதம் அல்லவா? என்று தன் ஏக்கத்தை வெளியிடுகிறார்.

    வள்ளை வாய் கிழித்துக் குமிழ் மறித்தமர்ந்த
        மதாரிக் கண்ணியும் நீயும்
    மழலை நாறமுதக் குமுத வாய்க் குழவி
        மடித்தலத்து இருத்தி, முத்தாடி,
    உள்ள நெக்குருக, உவந்து மோந்தணைத்து
        ஆங்கு உகந்து நீர் இருத்திரால் உலகம்
    ஒருங்கு வாய்த்திருக்கு ஒருதலைக் காமம்
        உற்றவா என்கொலோ? உரையாய்
    
     [வள்ளை---காது.  குமிழ்---நாசி.  கண்ணி---கண்ணை உடையவள், உமாதேவியார்.  குழவி---முருகன். முத்தாடி==முத்தமிட்டு என்னையும் வா என்றழைத்து மடியிலிருத்திக் கொஞ்சினால் என்ன? நானும் உங்களுக்கு ஒரு குழந்தை தானே? என்று உரிமையோடு வாதாடுகிறார் புலவர். 

     மதுரைக் கதம்பம், பலவண்ண மலர்களால் தொடுக்கப்பட்டிருப்பது போல மதுரைக் கலம்பகம் என்ற நூலும் பல்வேறு உணர்வுகளைக் கொண்ட பாடல்களால் பாடப்பெற்றிருக்கிறது. ஒவ்வொன்றும் ஒரு வண்ணம் ஒரு மணம் நிறையப்பெற்று விளங்குகிறது.

- திருச்சிற்றம்பலம் -

Related Articles